Friday, March 16, 2012

நொந்து நூலயிடுவோம்....வெந்து noodles-ஆ ஆயிடுவோம்.......


கத்தாரில் இருக்கும் என் நண்பருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்தத்திற்கு ஒரு வாரம் முன்பும், பின்பும் அவருடன் தொலைபேசியில் பேசினேன். நாங்கள் பேசியதோட தொகுப்பு கீழே:

நிச்சயதார்த்தத்திற்கு ஒரு வாரம் முன்பு......

நான்: "என்னடா மாப்பிள்ளை..... அடுத்த வாரம் கல்யாணம் நிச்சயம். இனிமே, கல்யாணம் வரைக்கும் இந்தியாவுல புள்ளையோட ஒரே கடலைத்தான...."

நண்பன்: "சீ...சீ... அதெல்லாம் தப்புடா. கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணுகிட்ட பேசுறது ரொம்ப தப்பு."

நான்: "இது என்னடா சின்ன புள்ளத்தனமா இருக்கு. பேசுனா என்னா, குடியா முழுகிடும்."

நண்பன்: "அதெல்லாம் தப்புடா. உனக்கு தெரியுமா. Bible-ல என்ன சொல்லி இருக்குன்னா, வார்த்தைதான்...."

நான்: "டேய்..போதும். [மனசுக்குள்] இதெல்லாம் உருப்படறதா?.......

நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரம் கழித்து....

நான்: "என்னடா மாப்பிள்ளை..... இப்பெல்லாம் கூப்பிடவே மாட்டேங்குற... வேலை ஜாஸ்தியா?"

நண்பன்: "இல்லை..மச்சான். கொஞ்சம் பிஸி. புள்ளைகிட்ட டெய்லி பேச வேண்டி இருக்குல்ல...."

நான்: "வாடா.. சத்திய புத்திரா. அன்னிக்கு என்னமோ, வார்த்தை முக்கியம். Bible-ல சொல்லி இருக்குன்னு ஏகத்துக்கு பேசுன...

நண்பன்: "கரெக்ட் மச்சி... ஆனா அதே Bible-ல என்ன சொல்லி இருக்குன்னா...."

நான்: "நீ பண்ணுற நொன்ன மயிருக்கெல்லாம் Bible-ல இழுக்க சொல்லி இருக்கா?"

நண்பன்: "அப்புடி இல்ல மச்சான். சரி அத விடு. என்ன பார்த்து அவ என்ன சொன்னா தெரியுமா?"

நான்: "என்ன சொல்லி இருப்பா. போன ஜென்ம பாவத்த, இந்த ஜென்மத்தில அனுபவிக்க போறேன்னு சொன்னாளா?"

நண்பன்: "நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொன்னாடா."

நான்: ‍‍‌"சரி. ஒரு ஆறுதலுக்கு சொல்லி இருப்பா. இதுக்கெல்லாம் feelings காட்டாத...."

நண்பன்: "அட, போடா. கூட வெச்சிக்க என்னோட photo வாங்கிட்டு போய் இருக்கா."

நான்: "அப்புறம்..."

நண்பன்: "என்னைய மாமா, மாமான்னு தான் சொல்றா... "

நான்: "அத விடு. ஒரு நாளைக்கு பிச்சைக்காரன் கூடத்தான் உன்ன நூறு தடவ தர்ம பிரபுன்னு சொல்றான். அதுக்காக, பீல் பண்றோமா. அப்புறம், வேலையெல்லாம் எப்பிடி போகுது."

நண்பன்: "டெய்லி தூங்கறதுக்கு முன்னாடி என்கிட்டே பேசிட்டுதான் தூங்கன்னுமாம்..."

நான்: "நான் கூட டெய்லி தூங்கறதுக்கு முன்னாடி ஒண்ணுக்கு போயிட்டுதான் தூங்குவேன். இப்போ அது ரொம்ப முக்கியமா?"

நண்பன்:  "என்னடா இப்பிடி பேசிட்ட..."

நான்: "பின்ன எப்புடி பேசுவாங்க? நான் என்ன கேட்டேன் - நீ ஒரு தனி' trackl-ல பேசிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?"

நண்பன்: "சரி விடு. வேலை நல்லா போகுது."

நான்: "சரி.. அப்புறம்...."

நண்பன்: "அவ என்னைய டெய்லி கூப்பிட்டு....."

நான்: "டேய்....போதும். [மனசுக்குள்] இதெல்லாம் உருப்படறதா?..."

இதனால் அறியப்படும் நீதி: ['நண்பன்' பட ஸ்டைல்ல படிங்க...]

1. நமக்கு figure கிடைக்காட்டியும், figure set ஆக போற நம்ம நண்பன் - வாழ்க்கைய அனுபவிக்க தெரியாம பழம் மாதிரி பேசுனா, நொந்து நூலயிடுவோம்.

2. நமக்கு figure கிடைக்காதப்போ, பழம் மாதிரி பேசுன அதே நண்பன் - figure set ஆனதுக்கு அப்புறம் வாழ்க்கைய முழுசா அனுபவிச்சா, வெந்து noodles-ஆ ஆயிடுவோம்....... :-)

Friday, August 26, 2011

ஆதலினால், காதல் செய்வீர்



இரண்டு வருடத்திற்கு முன்னால், ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் காதலிக்குறேன் என்று சொன்னால் "போடா.. போய் படிக்குற வழிய பாரு"ன்னு சொல்லி இருப்பேன். இன்று, மிகவும் சந்தேகம்... எப்படியும், அவன்' படிக்கும் Electrical Engineering, Electronics Engineering, Instrumentation and Control Systems, Engineering Drawing, Carpentry, Lathe, Digital Systems, Engineering Chemistry, Engineering Physics போன்ற பாடங்கள் பின்னால் பத்து பைசாவுக்கு உபயோகப்படும் என்று தோன்றவில்லை. எப்படியும், முக்கால்வாசி மாணவர்கள் TCS, CTS, HCL, Wipro, Infosys, IBM services, HP Services, Satyam, Accenture போன்ற நிறுவனங்களில் ஜல்லி அடிக்க போகிறார்கள். இந்த நிறுவனத்தில் ஜல்லி அடிக்க மேலே குறிப்பிட்ட ஒரு பாடம் கூட அவசியம் இல்லை. என்ன தேவை? கொஞ்சம் நுனி நாக்கு ஆங்கிலம், கொஞ்சம் கணிப்பொறி அறிவு, எந்த நிலையையும் சமாளிக்கும் திறமை, நிறைய அரசியல்... இதுக்கு எதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கணும்? ஒழுங்கா காதல் பண்ற வேலைய பார்க்கலாம்.

பெத்தவங்க பார்த்து கல்யாணம் பண்றதுல நிறைய சிரமம். முக்கியமா, ஜோசியக்காரன். முக்கி முக்கி படிச்சு, பரீட்சை எழுதி, வேலை வாங்கி, தேவையான அளவு அரசியல் பண்ணி, onsite வந்து, வேலை பார்க்குற மாதிரி நடிச்சு, இந்த பக்கம் வேலைய வாங்கி அந்த பக்கம் offshore கிட்ட கொடுத்து அவன ஒரு கத்து கத்தி, அவன்கிட்ட வேலைய வாங்கி நம்மளே செஞ்சு கிழிச்ச மாதிரி ஒரு scena போட்டு, இரண்டு வாரத்துக்கு ஒரு தடவ சம்பளம் வாங்கி, டாலர் டாலரா கணக்கு போட்டு செலவு பண்ணி வாழ்கையில் settle ஆகணும்ன்னு முயற்சி பண்ணா, பத்தாவதோட படிப்ப நிறுத்திட்டு, கொஞ்ச வருசம் ஊர சுத்திட்டு, அப்புறம் ஒரு போர்ட மாட்டிக்கிட்டு ஜோசியம் பார்க்க உட்காறவன் கால்ல விழ சொல்லுவாங்க. சரி, பரவாயில்லைன்னு அவன்கிட்ட போய் கேட்டா: "2,4,6,8,10,12 கட்டத்துல சனி இருக்க கூடாது. 3,5,7,9,11 கட்டத்துல இருந்தா அதுக்கு நேர் பார்வையில செவ்வாயும் புதனும் இருக்க கூடாது. 8, 10 ல குரு இருக்க கூடாது. அவரு இவற சைட்டு அடிக்க கூடாது. இவரு அவர சைட்டு அடிக்க கூடாது." இப்பிடி ஆயிரம் ரூல்ஸ் பேசுவாங்க. ஏன்டா? மொத்தமா இருக்கறது 12 கட்டம். இதுல ஏன்டா ஏன் உயிரை வாங்குறீங்க. ஒருவேளை, நம்மள விட நல்லா இருக்காங்களேன்னு கடுப்புல இப்பிடி பண்றாங்களா? யாரவது, ஜோசியகாரங்க மனநிலைய பத்தி ஆய்வு கட்டுரை எழுதி Phd பண்ணலாம்.

அதுலயும், இப்போ பொண்ணு தேடுற விதமே மாறிடுச்சு. முன்னர் மாதிரி Hindu-வில் விளம்பரம் கொடுக்க வேண்டாம். ஏராளமான வலை மனைகள் வந்தாச்சு. இன்ன மதத்தில், இன்ன சாதியில், இன்ன உட்பிரிவில், இன்ன கிளை பிரிவில் பெண் வேண்டும் என்று கேட்க முடியும். அவனவன் மூளைய கசக்கி கணிபொறிய கண்டுபிடிச்சு, இணையத்தை கண்டுபிடிச்சு அடுத்து என்ன பண்ணலாமுன்னு யோசிக்குறப்போ, சாதி வாரியா துணை தேட அத உபயோகபடுத்துற மூளை இந்தியனுக்கு மட்டும்தான் வரும். இதுல இன்னொரு விஷயம் கவனிக்கணும். அதிகம் படிச்சவங்ககூட, இதுல குறிப்பா இருக்குறது. ஒரு குடும்பம் எழுதி இருக்கு "கம்மா நாயுடு மட்டும். மற்ற நாயுடுகள் வேண்டாம்". இந்த குடும்பத்தின் தலைவர் ஒரு பல்கலைகழகத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர். குடும்ப தலைவி ஒரு ஆசிரியர். பெண் மேலே சொன்ன ஒரு நிறுவனத்தில் ஜல்லி அடிப்பவர். படிப்பின் மூலம் சாதியை ஒழித்து விடலாம் என்று இனி யாராவது சொன்னால் கட்டை எடுத்து அடிப்பேன். படிப்போ, பதவியோ, வேலையோ சாதியை ஒழிக்காது...

அடுத்து, பெண்கள் கொடுக்கும் requirements. இதுவரை எத்தனையோ client நிறுவனங்களில் இருந்து ஏராளமான requirements வாங்கி இருக்கிறேன். ஆனால், இவர்கள் கேட்பது மாதிரி மண்டையை சொரிய வைத்த தேவைகள் எதுவும் இல்லை. ஒரு பெண்:

"My future husband must be Slim & Athletic"

என்று கேட்டு இருக்கிறார். இன்னொரு பெண்:

"I go shopping a lot. He must be able to spend a lot and get me everything I want"

என்று இன்னொருவர். உண்மையில், இதை எல்லாம் பார்த்து தலையில் அடித்து கொண்டேன். "Slim & Athletic" - புருசனும் பொண்டாட்டியும் என்ன ஒலிம்பிக்ஸ்ல ஓட போறாங்களா? தேவையான எல்லாத்தையும் வாங்கி கொடுக்கறதுன்னா, LIC இல் இரண்டு மாடியும், ஒரு நாலு ஏரோபிளேனும் வாங்கி கொடுக்கலாமா?

இது எல்லாத்தையும் விட கொடுமை. ஒரு பெண்ணிடம் நேரில் பேசினேன். அப்போ அவங்க கேட்டாங்க: "What is your future plan?" அந்த பெண்ணிடம் பேசும் பொழுது நேரம் மாலை 7:30. "இனிமே போய் சமைச்சு சாப்பிட முடியாது. போற வழியில் உடுப்பியில் ஒரு ரச வடையும் மசால் தோசையும் சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம்"ன்னு யோசித்தேன். சத்தியமா எனக்கு அப்போ இருந்த ஒரே future plan அது மட்டும்தான். இத அப்புடியே சொல்ல முடியுமா? அப்படி எல்லாம் ஒன்னும் இல்லீங்கன்னு தலைய சொரிந்தேன். அட ஆண்டவா.....

சரி, இந்த கொடுமைய எல்லாம் தாண்டி ஒரு பொண்ண பார்த்தா, கடைசியில சொல்லுவாங்க. அந்த சம்பந்தம் வேணாம். ஏன்? அவங்க சொந்தக்காரங்க சரியில்லை. என்ன பிரச்சனை? அந்த பொண்ணோட சித்தியோட மச்சினனோட மாமனோரோட ஒன்னு விட்ட சித்தப்பா பையன்.... நான் கேட்பதை நிறுத்தி ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.....

சொல்லுங்க.. இவ்வளவு பிரச்சனை தேவையா? அநேகமா, இந்த பிரச்சனை எல்லாம் வராம இருக்க சுமாரான வழி, பேசாம படிக்குற காலத்துலேயே காதலிக்கணும். (கல்லூரிக்கு வெளிய வர்றதுக்குள்ள பாதி பேரு commit ஆயிடுவாங்க). அதனால, நான் என்ன சொல்ல வரேன்னா:

"ஆதலினால், காதல் செய்வீர்"

Sunday, June 12, 2011

அம்பானி பையனும் அப்புசாமி பையனும்...

கொஞ்ச நாள் முன்னாடி தமிழ்நாட்டு நண்பர் ஒருத்தரிடம் கதையடித்தேன். நண்பர் லேசுப்பட்டவர் இல்லை. அன்னா ஹசாரே உண்ணா விரதம் இருந்தாருன்னு இவரும் ரெண்டு நாள் சாப்பிடாம இருந்தவர். அப்பப்போ சமுதாயத்த பத்தி இவரு பேசுறத கேட்டா, எனக்கு காதுல 'static' அடிக்கும். பேச்சு, அங்க சுத்தி இங்க சுத்தி அரசியலுக்கு வந்திடுச்சு...

நண்பர்: நம்ம தமிழ்நாட்டு ஜனங்கள திருத்தவே முடியாது. இவங்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். அந்த அம்மாவை ஆட்சியில உக்கார வெச்சாங்க இல்ல... நல்லா படட்டும்..
நான்: ஏன்டா.. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அய்யாவோட ஆட்சிய திட்டுனியே...
நண்பர்: அது வேற.... ஆனா, அந்த ஆளு கொண்டு வந்தாருன்னு, சமச்சீர் கல்வி திட்டத்த நிறுத்திடுச்சே.. இந்த அம்மாவை திருத்தவே முடியாது.
நான்: அந்த அம்மா எதுக்காக நிறுத்திச்சுன்னு எனக்கு தெரியாது. ஆனா, அதை நிறுத்தினது உத்தமம். சமச்சீர் கல்வி ஒரு உதவாத திட்டம்.
நண்பர்: உன்னைய மாதிரி படிச்ச கொழுப்பெடுத்த '!@#$%^' ஆளுங்க இருக்கறதாலதான் நம்ம நாடு உருப்படாம இருக்கு. உனக்கெல்லாம் படிச்சு அமெரிக்கா போயிட்ட கொழுப்பு. மவனே, நீ மட்டும் இந்தியா பக்கம் வந்தா, உன்னைய ''!@#$%^ '!@#$%^ '!@#$%^' பண்ணிடுவேன்....
நான்: Oops..
....
....

அப்புறம் பேச்சு வேற பக்கம் போயிடுச்சு. இப்போ யோசிச்சு பார்க்கிறேன். உண்மையிலேயே, சமச்சீர் கல்வி திட்டம் அவசியமா? அதனால யாருக்கு என்ன லாபம்? தமிழ்நாட்ட பொறுத்த அளவில், கல்வியோட தரம் சரியா இல்லைன்னு ஒத்துக்கறேன். அது சரி செய்ய பட வேண்டியது அவசியம். ஆனால், எல்லாருக்கும் அரசாங்கம் சொல்ற பாடத்திட்டம் தேவையா? முதல்ல, சமச்சீர் கல்வின்னா என்ன?

எல்லா மாணவர்களுக்கும் ஒரே விதமான கட்டமைப்பு வசதிகள், ஒரே விதமான திறமையுள்ள ஆசிரியர்கள், ஒரே விதமான பாடத்திட்டம் இதெல்லாம் இருக்கணும். இதுல சொல்லாத ஒரு விஷயம் - ஒரே விதமான கட்டணம். மத்த எல்லாம் ஒரே மாதிரி இருந்தா எவன் அதிக கட்டணம் கொடுப்பான்? ஒரே கட்டணம் தான் கொடுப்பான். படிக்கும் போது புல்லரிக்குது. எல்லாருக்கும் ஒரே விதமான கல்வி. இல்லையா? இல்லை... ஒரு சில விஷயங்கள் படிக்கும் பொழுது புல்லரிச்சாலும் நடைமுறைக்கு ஒத்து வராது. ஏன்?

இப்போ நம்ம ஊருல அரசாங்கமே பள்ளிக்கூடம் நடத்துது. அவங்க நடத்துற பள்ளிகூடத்துல ஒரே பாடத்திட்டம் ஏற்கனவே இருக்கு. மத்தபடி இருக்குற 'மெட்ரிக்' மாணவர்களுக்கு மட்டும்தான் வேற பாடத்திட்டம். இதுல எது நல்ல பாடதிட்டம்ன்னு சொல்லி தெரிய வேணாம். உங்களுக்கு எல்லாரும் நல்ல கல்விய அடையனும்முன்னு ஆசை இருந்தா அரசாங்க பாட திட்டத்த மாத்தலாமே? செய்ய மாட்டாங்க. அத விட்டுட்டு 'மெட்ரிக்' பாட திட்டத்தோட தரத்த குறைப்பாங்க. இது தேவையா? இவங்க பாடத் திட்டம் புடிச்சிருந்தா ஜனங்க பிள்ளைகள அரசாங்க பள்ளிக்கூடத்துல சேர்த்து விடுவாங்களே... அப்படி செய்யாத போதே தெரிய வேணாம். தப்பு எங்கன்னு? அத சரி பண்ணுறத விட்டுட்டு எல்லாருக்கும் ஒரே கல்வி திட்டம் ரொம்ப அவசியமா.....

அடுத்து எல்லாரும் கேட்குற ஒரு கேள்வி.... 'இந்த உலகத்துல பிறக்குற எல்லா குழந்தைகளும் சமம். அப்படி இருக்கும் பொழுது அம்பானி பையன் ஒரு மாதிரி படிப்பு படிக்குறான். அப்புசாமி பையன் ஒரு மாதிரி படிப்பு படிக்குறான். இது தப்பு இல்லையா? இது அந்த குழந்தையோட உரிமைய பாதிக்காதா?

ஜனங்க இந்த கேள்விய கேட்டாத்தான் எனக்கு அப்புடியே பத்திகிட்டு வரும். இந்த விசயத்துல அந்த குழந்தையோட உரிமை ஒண்ணுமே இல்லை. ஒரு மனிதனுக்கு கல்வி, உரிமை கிடையாது. அது ஒரு வசதி, பரிசு. It is not a right. But, it is a privilege. ஆனால், அந்த குழந்தைக்கு என்ன மாதிரியான கல்வி கிடைக்கணும் முடிவு பண்ற உரிமை அந்த குழந்தையோட அம்மா அப்பாவுக்கு இருக்கு. அந்த உரிமை அவரவர் உழைப்புக்கும் தகுதிக்கும் ஏற்றவாறு அமையும். பெட்ரோல் பங்குல வேலை பார்த்து பின் வாழ்கையில் கஷ்டப்பட்டு உழைச்சு முன்னுக்கு வந்த அம்பானிக்கும், அஞ்சாம் வகுப்போட படிப்ப நிறுத்தி பின் மாடு மட்டுமே மேச்ச அப்புசாமிக்கும் ஒரே மாதிரி உரிமை இருக்க முடியாது. அம்பானியோட உழைப்புக்கு கிடைத்த பரிசு அவரு பையனோட கல்வி. இப்போ அம்பானி பையனும் அப்புசாமி பையனும் ஒரே மாதிரி படிக்கனும்ன்னு சொன்னா இது அம்பானியோட உரிமைய பறிக்கறது. இது மட்டும் சரியா?

வெறும் அரசியலுக்காக இந்த மாதிரி கல்வி திட்டத்த கொண்டு வந்து தமிழர்கள் வாழ்கையில் முன்னேற இருக்குற ஒரே நம்பிக்கையான கல்வியில மண்ணை போட கூடாது.

Tuesday, May 31, 2011

ஆள்பவளும் நீயே....

வெகு நாட்கள் கழித்து கவிதை என்ற பெயரில் இதை கிறுக்கினேன். யாரை பற்றி எழுதினேன்? அட.. அது எதுக்குங்க....

அழகன் அவன் ஊரில்
உதித்தவள் நீ
அன்பின் உருவாக
அமர்ந்தவள் நீ
அகிலத்து புலவர்
எல்லாம் கூடினாலும்
அறிவுக்கு அடங்காத
அதிசயம் நீ

எந்த நாளும்
என் மனதில் வாழும்
அமுதம் நீ
எப்பொழுதும் என்
கவியின்
அர்த்தம் நீ
எட்ட நின்று பார்க்கும்
என் - வாழ்கையின்
அகரம் நீ

பாற்கடலில் உருவான
அற்புதம் நீ
பார்வையிலே எனை வீழ்த்தும்
அழகியும் நீ
பார்த்தாலே முக்தி தரும்
ஆனந்தம் நீ

அன்பாய்...
அமுதமாய்....
அகரமாய்.........
ஆனந்தமாய்......
என் வாழ்கையை
ஆள்பவளும் நீயே....
இரா.சாரங்கன்

Sunday, April 10, 2011

அன்னா ஹசாரே - சில கருத்துக்கள்....

கடந்த ஒரு வாரமாக அன்னா ஹசாரேவுக்கு ஆதரவான இணைய பதிவுகள், பேஸ்புக்கில் செய்திகள், பல இடங்களில் போராட்டங்கள், அமெரிக்காவில் சில பல்கலைகழகங்களில் மெழுகுவர்த்தி ஏற்றுதல்.... இப்பிடி ஒரே அலப்பற.... ஒரு வழியா போராட்டமும் முடிஞ்சிது. 'சொல்றத செய்வோம்... செய்யுறத சொல்லுவோம்'ங்கற லட்சியத்தோட இருக்குற இந்திய அரசாங்கம் வாக்கு கொடுத்திருச்சு... அதனால இனி யாரும் கவலை பட வேணாம். இன்னும் ஒரு வருசத்துல அந்த சட்டம் அமலுக்கு வந்துடும். இந்தியா இன்னும் ஒன்பது வருசத்துல வல்லரசு ஆயிடும். இந்த போராட்டத்துல கலந்துகிட்ட எல்லா அறிவு ஜீவிகளும் சந்தோசமா ஒய்வு எடுக்க போலாம். ஏன்னா, துனிசியா - எகிப்து - லிபியா மாதிரி நம்மளும் பெரிய போராட்டம் நடத்தி வெற்றி அடைஞ்சிட்டோம்.. இல்லியா? உண்மையிலேயே, நம்ம நாட்ட நினைச்சு அழறதா சிரிப்பதான்னு தெரியலே....

மேல படிக்கறதுக்கு முன்னாடி ஒரு சில விஷயம்... அன்னா ஹசாரே மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. எனக்கும் அவர் மேல நிறைய மரியாதை இருக்கு. இந்த புது சட்டத்தால உண்மையிலேயே நாட்டுக்கு நல்லது நடக்கும்ன்னு அவர் நம்பறார். அவர் நம்பிக்கைய நான் மதிக்கிறேன். ஆனா, ஒத்துக்க மாட்டேன். ஏன்?

கொஞ்ச நேரம், உங்க உணர்ச்சிகள் எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சிட்டு யோசிச்சு பாருங்க? இந்த 'லோக் பால்' சட்டம் உண்மையிலேயே நாட்டுக்கு உதவுமா? ஒரு புது சட்டம் உருவாக்கப்படும் போது, அந்த சட்டத்தோட சரி-தவறுகளை, நடைமுறை சிக்கல்களை, மாற்று சட்டங்களை ஆராயணும். நடந்து முடிஞ்ச ஒரு வார கூத்துல, இந்த விசயத்தை ஆராய்ஞ்சு இந்த சட்டத்துக்கு ஆதரவு கொடுத்துவங்க ரொம்ப கம்மி. அரசாங்கம் மேல இருக்குற வெறுப்பு, கட்சிகள் மேல இருக்குற வெறுப்பு, 71 வயசு காந்தியவாதி மேல இருக்குற மரியாதை - இவை மட்டும்தான் மக்கள் ஆதரவுக்கு காரணம். ஆனா, ஒரு சட்டம் கொண்டு வர, இது மட்டும் போதுமா? எந்த ஒரு விசயத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கு. இந்த சட்டத்தோட இன்னொரு பக்கத்த யாரும் பார்த்ததா தெரியல.

இந்த சட்டத்த நடைமுறை படுத்த முடியும்ன்னு எனக்கு தோணலை. ஊழலை ஒழிக்க இப்போ இருக்குற அமைப்புகள் இல்லாம புதுசா ஒரு அமைப்பு உருவாக போகிறது. இதில் யார் இருப்பார்கள்? ஓய்வு பெற்ற நீதிபதிகள்... IAS அதிகாரிகள்... மக்கள்.. அப்படின்னு சொல்றாங்க. நம் நாட்டு நீதிபதிகளோட லட்சணம் நமக்கே தெரியும். அதிகாரிகள்? காமெடி பண்ணாதிங்க பாஸ்... மக்கள்? யார் இந்த மக்கள்? எப்படி இவர்களை தேர்வு செய்வாங்க? யார் இவர்களை தேர்வு செய்வாங்க? அதுக்கு தனியா ஒரு தேர்தல் நடத்துவார்களா? இல்லை, அரசாங்கம் (அதாவது அரசியல்வாதிகள் ) இவர்களை தேர்வு செய்வார்களா? ஆக, ஏதோ ஒரு இடத்தில் அரசியல்வாதிகளை சார்ந்து இருக்கும் இவர்கள் எப்படி அவர்கள் ஊழலை எதிர்ப்பார்கள்? இப்படி ஆயிரம் பிரச்சனைகள் உள்ள சட்டம் இது. ஆனால் ஒரு காந்தியவாதி மேல் உள்ள மரியாதையால் இதற்கு கண்மூடித்தனமான ஆதரவு.

உண்ணா விரதப் போராட்டம் முடிஞ்சு இன்னும் ஒரு வாரம் கூட முடியலை. அதற்குள், போராட்டம் நடத்திய குழுவினருக்குள் சண்டை. ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் எதற்காக 'கமிட்டி'யில் இருக்க வேண்டும் என்று? இவர்களா ஒரு உருப்படியான சட்டத்தை கொண்டு வர போறாங்க. எனக்கு நம்பிக்கை இல்லை....

இன்னும் என்ன கூத்துகள் நடக்கும் என்று பார்ப்போம்.....

Monday, March 21, 2011

காதலும்...பொண்ணுக வாலும்....

இந்தியாவில் உள்ள நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். நண்பர் சமீபத்தில் காதல் தோல்வி அடைந்தவர். அவர் செய்த தவறு? மிகவும் எளிமையான தவறு. காதலித்த பெண்ணை அவரால் மாதம் ஒருமுறை மட்டும்தான் பார்க்க இயலும். மற்ற நேரங்களில், தொழில் விசயமாக பல ஊர்களுக்கு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. அதனால், தினமும் தொலைபேசி மூலம் பேசுவார். விளைவு? ஒரு முறை ஊர் திரும்பி வந்து பார்த்தார். அந்த பெண், தனக்கு அவர் மேல் காதல் இல்லை என்று கூறி விட்டார். நண்பர் மனமுடைந்து விட்டார். அதை மறக்க, அவருக்கு தெரிந்த ஒரே வழி. தனது தொழிலில் 24 மணி நேரமும் இயந்திரம் போல வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில்தான் என்னுடன் பேசினார்.

பேச்சு எங்கெங்கோ அலைந்து, இறுதியில் மோகன்தாஸ் காந்தியிடம் வந்து நின்றது. நான் கேள்விப்பட்ட கதை ஒன்றை சொன்னேன் . காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தி. ராஜாஜியின் மகள் லக்ஷ்மி. இவர்கள் இருவரும் காதலித்தார்கள். அப்பொழுது தேவதாசுக்கு வயது 28. லக்ஷ்மிக்கு வயது 15. இந்த வயது வித்தியாசம் காரணமாக காந்தியும் ராஜாஜியும் அவர்களை ஐந்து வருடம் காத்திருக்க சொன்னார்கள். ஒரு நிபந்தனையும் விதித்தார்கள். பிரிந்திருக்கும் ஐந்து வருடமும் இருவரும் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளக்கூடாது. இருவருமே அதை ஏற்று கொண்டார்கள். ஐந்து வருடம் கழித்து 1933-இல் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த சம்பவத்தில் ஒரு விஷயம் யோசிக்கிறேன். காந்தியும் - ராஜாஜியும் எதற்காக அந்த ஐந்து வருட நிபந்தனை விதித்தார்கள்? வயது வித்தியாசம் மட்டும்தான் காரணமா? ஒருவேளை, லக்ஷ்மிக்கு 21 வயதாகி இருந்தால், அதே நிபந்தனை விதித்திருப்பார்களா?

நிச்சயம் விதித்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் காதல் உண்மையானதா என்று சோதிக்க மிகவும் அற்புதமான பரீட்சை. அவர்கள் காதல் உண்மையாக இல்லாவிட்டால் நிச்சயம் ஐந்து வருடம் அவர்களால் தாக்கு பிடிக்க முடியாது. இந்த பரீட்சையில் தோல்வி அடைந்துவிட்டால் பிறகு காதலித்தவரை நினைத்து புலம்புவதில் அர்த்தமே இல்லை. ஏனென்றால், ஆரம்பத்தில் இருந்தே அது உண்மையான காதல் இல்லை. இது நடந்தது 1930-களில். இப்பொழுது காலம் மிகவும் வேகமாக முன்னேறி விட்டது. ஐந்து வருடம் எல்லாம் ரொம்ப அதிகம். ஐந்து மாதம் கூட பல காதல்கள் தாங்குவதில்லை. இதோ, ஒரு சில மாதங்கள் பிரிந்ததால் நண்பரின் காதல் தோல்வியில் முடிந்துவிட்டது. (அடியேனுக்கு, இந்த விசயத்தில் நான்கு வருடம் காத்திருந்து தோல்வி கிடைத்தது. வாழ்கையில் நான் வீணடித்த நான்கு வருடங்கள் என்ற வருத்தம் இன்றும் எனக்கு உண்டு )

இதெல்லாம் கேட்ட நண்பர் சொன்னார். இப்போதான்டா புரியுது. லவ் பண்றவன் எல்லாம் ஏன் பொண்ணுக வால புடிச்சுகிட்டே சுத்தரானுகன்னு. ஒரு நிமிஷம் விட்டாலும் விட்டுட்டு போயிருவாங்கன்னு ஒரு பயம்தான். எனக்கு என்னமோ அவர் சொன்னது உண்மைதான்னு தோணுது. பேசி முடிக்கும் பொழுது, தான் படித்த ஒன்றை சொன்னார்:

"If you love something, set it free; if it comes back it's yours. It it doesn't, it never was"

"நமக்கெல்லாம் ஞானோதயம் 26 வயசுலதான் வருது"ன்னு சொல்லி சிரித்தபடியே தொலைபேசி தொடர்பை துண்டித்தேன்.

Sunday, November 21, 2010

உணவே பிரம்மம்

'உணவே பிரம்மம்'ன்னு சொல்லுவாங்க. இந்த உலகத்துல எல்லாரும் படிக்கறதும் வேலை பாக்கறதும் சம்பாதிக்கறதும் எதுக்காக? என்னய கேட்டா முதல்ல சாப்பாட்டுகாகத்தான்னு சொல்லுவேன். மத்த விசயமெல்லாம் அப்புறம் தான். 'சந்தோசம்ன்னா என்னன்னு அனுபவிக்கும்போது தெரியாதுன்னு' விருமாண்டி படத்துல ஒரு வசனம் வரும். அது எதுக்கு பொருந்துதோ இல்லையோ சாப்பாடு விசயத்துக்கு அற்புதமா பொருந்தும். இந்தியாவுல இருந்தப்போ நல்ல சாப்பிட்டேன். அந்த காலத்துல அதோட அருமை புரியல. அமெரிக்கா வந்ததுக்கு அப்புறம் அது கிடைக்காம அலையுறப்பதான் அதோட அருமை தெரியுது.

ஆனா, ஒரு விஷயம். அமெரிக்கர்கள் சாப்பாட்டை கொண்டாடறாங்க. அதுக்காகவே, ஒரு தனி தொலைகாட்சிய 'Food TV' ன்னு லாபகரமா நடத்துறாங்க. இருநூறு வருஷம் கூட இல்ல, அவங்க வரலாறு. ஆனா, அதுல இருக்குற சின்ன சின்ன விசயத்த கூட மறக்காம தலையில தூக்கி வெச்சி கொண்டாடுறாங்க. எந்த புகழ் பெற்ற கடைக்கு போனாலும், இது என் தாத்தா எண்பது வருசத்துக்கு முன்னாடி கண்டுபிடிச்ச உணவு. அதோட ருசி மாறாம அப்புடியே இன்னமும் செஞ்சி தரோம்னு ஒரு கதை சொல்றாங்க. உதாரணத்துக்கு, நியூயார்க் நகரத்துக்கு பக்கத்தில இருக்குற 'Anchor Bar'. இங்கதான் முதன் முதலா 'Buffalo Wings'ன்னு ஒரு உணவ உருவாக்கி இருக்காங்க. இன்னிக்கும் அந்த கடைய அந்த குடும்பம் வெற்றிகரமா நிர்வகிக்குது. அவங்களோட 'Sauce'அ உலகம் பூரா ஏற்றுமதி பண்றாங்க.

அமெரிக்காவோட தென் மாநிலங்களில் 'Waffle House'ன்னு ஒரு கடை. நம்ம ஊர் இனிப்பு பணியாரம் மாதிரி ஒன்றுதான் அங்க முக்கியமான உணவு. 1955-இல் இந்த கடைய திறந்தாங்க. இந்த கடைக்கு மக்கள் தரும் வரவேற்பு ஆச்சர்யமான விஷயம். பேஸ் புக் போன்ற இணையதளங்களில் இதற்கென குழுக்கள் அமைத்து ஆதரிக்குறாங்க. அது மட்டுமல்ல. இப்போ அந்த கடைக்கு பல இடத்துல கிளைகள் இருந்தாலும், அது முதல் முதலா ஆரம்பிச்ச கடைய இன்னும் அப்புடியே பழமை மாறாமல் வெச்சிருக்காங்க. இப்பிடி ஒவ்வொரு கடை(டி)க்கும் ஒரு கதை. ஒரு வரலாறு. இது அவங்களுக்கு பல சமயம் லாபகரமான தொழிலா இருக்கு. இன்னிக்கு, நயாகரா நீர் வீழ்ச்சிய பாக்க போற யாரும் 'Anchor Bar' போகாம வர மாட்டாங்க.

இதே மாதிரி யோசிச்சா, நம்ம ஊருலயும் நிறையா கடைங்க லாபம் பார்க்கலாம். ஆனா, நம்ம என்ன பண்றோம்? நம்ம சாப்பாட்ட விட்டுட்டு அமெரிக்க சாப்பாட்டு பின்னாடி அலையுறோம். போன வருஷம் போனப்போ, சென்னையில இருக்கற Mcdonalds கடையுல சனம் நீள வரிசையுல நின்னு வாங்கி சாப்பிட்டத பார்த்தேன். தலையில அடிச்சுக்கிட்டு வந்தேன். 'Spencer Plaza' வுல இருக்குற 'Sub Way' இல் ஒரு 'Sub' இருநூது ஐம்பது ரூபாய்க்கு மக்கள் வாங்கி சாப்பிட்டத பார்த்தேன். உண்மையிலேயே, இந்த சனத்துக்கு நம்ம சாப்பாட்ட பத்தி தெரியுமான்னு சந்தேகம் வந்திடுச்சு.

உச்சி வெயில் மண்டைய பிளக்கும் போது, கொஞ்சம் கம்மங் கூழோ கேப்பங் கூழோ குடிச்சா ஒரு சுகம் வரும் பாருங்க. அதுவும் அதுக்கு தொட்டுக்க வெங்காயம் வஞ்சினம் இருந்துச்சுன்ன சொர்க்கம்தான். இது ராஜ ராஜ சோழன் குடிச்சது, ராஜேந்திர சோழன் குடிச்சதுன்னு எதாவது ஒரு கதை சொல்லி விக்காம, இன்னிக்கு அத சுத்தமா மறந்துட்டு கோக் பெப்சின்னு நாம குடிக்க போயிட்டோம். காலையில, இப்போ எல்லாம் சனங்க 'Corn Flakes' சாப்பிட ஆரம்பிச்சுடாங்க. இதுல எத்தனை பேரு ராகி களிய சாப்பிடுவாங்க? இந்த மாதிரி பல சாப்பாடா நாம மறந்துட்டு வரோம்ன்னு தோணுது. பதநீர், பானகம், கள்ளுன்னு இந்த சாப்பாடெல்லாம் இன்னும் அம்பது வருஷம் கழிச்சி இருக்குமான்னே தெரியலே. நம்ம ஊருல மட்டும் ஏன் இந்த நிலைமை?